செய்திகள்

திருத்தணி அருகே தாய்-மகன் கொலையில் 6 பேர் சிக்கினர்

Published On 2019-04-11 09:39 GMT   |   Update On 2019-04-11 09:39 GMT
திருத்தணி அருகே தாய் மற்றும் மகன் கொல்லப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள் தனியார் டயர் தயாரிக்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி வீரலட்சுமி (40), மகன் போத்திராஜ் (10) அருகில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 8-ந் தேதி காலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜ் ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

மேலும் பீரோவில் இருந்த 21 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது. கொள்ளையை தடுத்ததால் தாய்-மகனை கொலை செய்து மர்ம கும்பல் தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமிரா பதிவு மற்றும் செல்போன் டவரில் பதிவான சிக்னலை வைத்து விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
Tags:    

Similar News