செய்திகள்

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன்-பணம் கொள்ளை

Published On 2019-03-14 14:41 GMT   |   Update On 2019-03-14 14:41 GMT
மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குட்பட்ட விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (வயது 41). இவர்களது மகள் அபிநயா கல்லூரி மாணவி. செல்வராஜ், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த அழகுமீனா, கடலாடியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நேற்று காலை அபிநயா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தாயார் அழகுமீனாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.36 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில், அழகு மீனா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News