செய்திகள்

காரிமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- ரூ.6 லட்சம் கொள்ளை

Published On 2019-03-13 10:17 GMT   |   Update On 2019-03-13 10:17 GMT
காரிமங்கலம் அருகே நேற்று இரவு கோவில் உண்டியலை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சி உட்பட்ட ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் மஹா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை பூசாரி மீண்டும் கோவிலை திறக்க வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தையும், 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று அள்ளிகுட்டை பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலிலும் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News