செய்திகள்

மன்னார்குடியில் பாமணி ஆற்றில் ரவுடி படுகொலை- போலீசார் விசாரணை

Published On 2019-03-11 10:54 GMT   |   Update On 2019-03-11 10:54 GMT
மன்னார்குடி பாமணி ஆற்றில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழவிழல்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அசோக்குமார் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்மீது மன்னார்குடி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருந்தன. மேலும் சரவணனின் பெயர் ரவுடி பட்டியலிலும் உள்ளது.

இந்த நிலையில் மன்னார்குடி மேல்பாலம் பாமணி ஆற்று சட்ரஸ் அருகில் ரவுடி அசோக்குமார் இன்று தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மன்னார்குடி போலீஸ் டி.எஸ்.பி. கார்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடி அசோக்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அசோக்குமார் உடலை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரவுடி அசோக்குமார் தலையில் வெட்டு காயம் இருந்ததால் மர்ம கும்பல் அவரை முன்விரோதத்தில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். நள்ளிரவில் அசோக்குமாருக்கு மது வாங்கி கொடுத்து பாமணி ஆற்றுக்கு அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடியை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News