செய்திகள்
தஞ்சையில் சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உடல் கருகி பலி
தஞ்சையில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதா கோட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மீனா (வயது 39). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்எண்ணை கொட்டி மீனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் அவர் காப்பாத்துங்க... காப்பாத்துங்க என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து உடல் கருகிய நிலையில் இருந்த மீனாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.