செய்திகள்

நெகமத்தில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி கடத்தல்

Published On 2019-02-25 12:03 GMT   |   Update On 2019-02-25 12:03 GMT
நெகமத்தில் வாலிபரை தாக்கி விட்டு காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை கடத்தி சென்ற அண்ணன், பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெகமம்:

ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 22). அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.இறுதி ஆண்டு படித்து வருகிறார். செஞ்சேரிபுத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபியில் உள்ள தனியார் கம்பனியில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பணிமாறுதல் ஆகி சதீஷ்குமார் உடுமலைக்கு வந்து விட்டார். அங்கு வந்தபிறகும் இருவருக்கும் காதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த 17-ந்தேதி உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டு இருவரும் செஞ்சேரிப்புத்தூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகன்யாவின் அண்ணன் ரகுபதி (27), அவரது தந்தை சென்னிமலை (55) தாயார் விஜயகுமாரி (49) ஆகிய 3 பேரும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரை தாக்கிவிட்டு சுகன்யாவை கடத்தி சென்று விட்டனர்.

இதில் சதீஷ்குமார் காயம் அடைந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு சுகன்யாவை கடத்தி சென்ற ரகுபதி மற்றும் அவரது தந்தை சென்னிமலை, தாயார் விஜயகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News