செய்திகள்

வில்லியனூரில் ஆயுர்வேத மருத்துவமனை ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும்- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2019-02-22 14:49 GMT   |   Update On 2019-02-22 14:49 GMT
வில்லியனூரில் ஆயுர்வேத மருத்துவமனை இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வில்லியனூர்:

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் வில்லியனூர் தீயணைப்பு நிலையம் அருகே ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுர் வேத மருத்துவமனை கட்டப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை விழா இன்று காலை நடைபெறுகிறது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

தற்போது கிராம பகுதி மக்கள் அலோபதி மருத்துவம் மட்டுமல்லாமல் ஆயுர்வேதிக் மருத்துவத்தையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக நமது அரசு மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.8 கோடி செலவில் வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படுகிறது. 

இது, வில்லியனூர் பகுதி மட்டும் அல்லாமல் மங்கலம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, உழவர் கரை போன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டப்படுகிறது. கிராம பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதுடன் மருந்து- மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், இந்திய மருத்துவ முறை ஆயுர்வேதிக் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன், கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News