செய்திகள்
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வீராசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் ஆனந்தன் (வயது 26). இவர் நேற்று பாலக்கோடு அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் பகுதியை கடந்து செல்லும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.