செய்திகள்

தண்டவாளத்தில் தற்கொலை மிரட்டல்- நண்பரை காப்பாற்ற முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

Published On 2019-02-15 08:09 GMT   |   Update On 2019-02-15 08:09 GMT
பொன்னேரி ரெயில்வே பாலத்தில உள்ள தண்டவாளத்தில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த நண்பரை காப்பாற்ற முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொன்னேரி:

பொன்னேரி தாயூமன் செட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த், வெங்கடேஷ் (19). கூலித் தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள்.

நேற்று இரவு இருவரும் பொன்னேரியில் நடந்த மற்றொரு நண்பரின் திருமணத்தில் கலந்து விட்டு திரும்பி வந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த அரவிந்த் என்னை யாரும் மதிக்கவில்லை. நான் சாக போகிறேன் என்று கூறி பொன்னேரி ரெயில்வே பாலத்தில் உள்ள தண்டவாளத்தில் நின்று கொண்டு நண்பர்களுக்கு போன் செய்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் நண்பனை காப்பாற்ற தண்டவாளத்தில் ஓடி வந்தார். அப்போது எதிரே வந்த ரெயில் வெங்கடேஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இதனை கண்டு பயந்து போன தற்கொலைக்கு முயன்ற அரவிந்த் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மிகவும் மோசமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News