மேலூர் அருகே இன்று மதியம் விபத்து: கல்லூரி மாணவர் பலி
மேலூர்:
மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளத்தில் தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மேலூர் மில்கேட்டைச் சேர்ந்த தர்மா (வயது 18), கருங்காலக்குடியைச் சேர்ந்த தினசூர்யா (19), அசோக் (18) ஆகியோர் படித்து வருகின்றனர்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று மதியம் சாப்பிடுவதற்காக கல்லூரியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.
மேலூர்-சிவகங்கை ரோட்டில் உள்ள மலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளியைச் சேர்ந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த தர்மா சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினசூர்யா, அசோக் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.