நெல்லை தாழையூத்தில் பள்ளி மாணவன் வேன் மோதி பலி
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து காமராஜ் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துச் செல்வம் (12). இவன் அதே பகுதி சங்கர் நகரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
முத்து செல்வம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் சைக்கிளில் புறப்பட்டு சென்ற அவன் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் அவன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்செல்வத்திற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.