செய்திகள்

சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

Published On 2019-02-11 17:46 GMT   |   Update On 2019-02-11 17:46 GMT
சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் நிவேதா (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். மேலும் ஆஸ்பத்திரி அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நிவேதா ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை தாழ் வைத்துக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார்கள். அப்போது அவர் அங்குள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் தோல்வி காரணமாக நிவேதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News