செய்திகள்

புதுக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-02-10 17:09 GMT   |   Update On 2019-02-10 17:09 GMT
புதுக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45).அ.தி.மு.க. பிரமுகரான இவர் கீரனூர் வடக்கு ரதவீதியில் காய்கறி, பழங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இன்று அதிகாலை திருச்சி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்த அவர், கடையில் வைத்து விட்டு மேலப்புதுவயலில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்றார்.  அதன்பிறகு அவர் நீண்டநேரமாகியும் கடைக்கு வரவில்லை.

இதையடுத்து கடை ஊழியர்கள் விஜயபாஸ்கரின் செல்போனை தொடர்பு கொண்டபோது , போனை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் சிலர், மேலப்புதுவயலில் உள்ள வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தூக்குப்போட்ட நிலையில் விஜயபாஸ்கர் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உடனடியாக கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயபாஸ்கர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கு அதிக கடன் இருந்து வந்துள்ளது. கடனை அடைக்கமுடியாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்த விஜயபாஸ்கருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
Tags:    

Similar News