செய்திகள்

கொங்கு மண்டல பா.ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டம் - அமித் ஷா பங்கேற்பு

Published On 2019-02-09 06:46 GMT   |   Update On 2019-02-09 08:09 GMT
ஈரோடு அருகே சித்தோட்டில் கொங்கு மண்டல பா.ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார். #AmitShah #BJP

ஈரோடு:

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதாவினர் தமிழகத்தை குறிவைத்து கூட்டணி தொடர்பாகவும், தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாளை(ஞாயிற்றுக் கிழமை) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் நடக்க உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வரும் போது அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு குறித்தும் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த தகவலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் வானதி சீனிவாசன் கூறும் போது, பிரசாரத்துக்காக வரும் அமித்ஷா முன்னதாக நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அமித் ஷாவின் வருகையால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

சித்தோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் கொங்கு மண்டல பா.ஜ.க. கூட்டமாக நடக்கும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கும் லட்சக்கணக்கான பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். #AmitShah #BJP

Tags:    

Similar News