செய்திகள்

திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-02-08 13:15 GMT   |   Update On 2019-02-08 13:15 GMT
திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த பெரிஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மனைவி மேரி ஹெலன் பாய் (வயது 56). இவர்களின் மகன் மெர்ஜின் ராஜ் (29). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

மெர்ஜின் ராஜ், வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை. அதனை மது குடித்து செலவு செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தகராறும் செய்தார்.

மெர்ஜின் ராஜ், வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக திரிந்ததை அவரது தாயார் மேரி ஹெலன் பாய் கண்டித்தார். இதனால் மேரி ஹெலன் பாயிக்கும், பால் ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்றும் இதுபோல தாயாருக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மெர்ஜின் ராஜ், தாயார் மேரி ஹெலன் பாயை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் வீடு முன்பு நின்ற வாழை மரங்களையும் வெட்டி நாசம் செய்தார். இது பற்றி மேரி ஹெலன் பாய், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மெர்ஜின் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். கைதான மெர்ஜின் ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News