திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது
திருப்பூர்:
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்காக சேர்ந்தார்.
மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தாயின் வயதை ஆய்வு செய்த போது அவர் 14 வயதே ஆன சிறுமி என்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக குழந்தைகள் நல அமைப்பினர் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் அவரது தந்தைக்கு தெரியாமல் 22 வயதான இளைஞர் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமி, குழந்தை மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சமூக நல கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.
நீதிபதி விசாரணை நடத்திய பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.