செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? விக்கிரமராஜா

Published On 2019-02-06 10:56 IST   |   Update On 2019-02-06 10:56:00 IST
வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். #Parliamentelection

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட வணிகர்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.

இதில் அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வணிகர்களை மிரட்டி வரும் அதிகாரிகள் தங்களது தவறை நிறுத்தி கொள்ளாவிட்டால் வணிகர்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளனர். அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களை தண்டிக்க பேரமைப்பின் உதவியை வணிகர்கள் நாட வேண்டும்.

வணிகர் சங்கங்களின் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பை அறவே அகற்றப்பட வேண்டும். திருப்பி செலுத்தக்கூடிய வகையில் நிலுவையில் உள்ள 93 ஆயிரம் கோடி உள்ளீட்டு வரி பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ரூ.5 லட்சம் வரை முழுமையாக வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும். 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார். #Parliamentelection

Tags:    

Similar News