செய்திகள்

தேனி பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2019-01-31 16:40 GMT   |   Update On 2019-01-31 16:40 GMT
தேனி பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.
தேனி:

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், வெங்கடாசலபுரம், தருமாபுரி, தாடிச்சேரி, கோட்டூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கண்மாய் பாசனம், கிணற்றுப் பாசனம், மானாவாரி என இடத்துக்கு ஏற்ப சாகுபடி செய்யப்பட்டது.

இங்கு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் விளைச்சல் அடைந்து உள்ளதை தொடர்ந்து அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் போதிய அளவில் கதிரடிக்கும் களம் வசதி இல்லாததால் சாலைகளில் கொட்டி மக்காச்சோளத்தை பிரித்தெடுத்து வருகின்றனர்.

இதனால், அரண்மனைப்புதூர்-காமாட்சிபுரம் சாலையில் பல இடங்களில் மக்காச்சோளக் கதிர்களை கொட்டி சோளத்தை பிரித்து எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. வியாபாரிகள் நேரில் வந்தே கொள்முதல் செய்கின்றனர்.

ஈரப்பதத்துடன் கூடிய மக்காச்சோளம் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.1,750-க்கும், ஈரப்பதம் இல்லாமல் உலர வைத்தது ஒரு குவிண்டால் ரூ.1,900-க்கும் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்வதால் விவசாயிகள் அவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News