செய்திகள்

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலையை சீரமைத்த பொதுமக்கள் - 50 பேர் கைது

Published On 2019-01-24 09:49 GMT   |   Update On 2019-01-24 09:49 GMT
முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

சென்னையில் இருந்து வானகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சிக்னல் அருகே குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

எனவே மதுரவாயல் குடியிருப்போர் கூட்டமைப்பு, திருவேற்காடு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பொதுமக்கள் இதற்கு உதவ முன் வந்தனர்.

இன்று காலை இந்த சாலையை சீரமைப்பதற்காக குண்டும் குழியுமாக இருந்த இடத்தில் ஜல்லிகற்கள், மணல் கொட்டப்பட்டன. அதைக்கொண்டு சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி சாலையை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதை அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

இது 4 வழி தேசிய நெடுஞ்சாலை. 2012-ம் ஆண்டு இதை 6 வழி சாலையாக மாற்ற அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை. ஆனால் இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 6 வழி சாலைக்குரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடியை அமைத்துள்ள ஒப்பந்ததாரர் தான் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இங்கு தினமும் ரூ.5 லட்சம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும் சாலை பணி நடக்கவில்லை. மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி, தமிழக முதலமைச்சர், உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவேதான் நாங்களே சாலையை சீரமைக்க முடிவு செய்தோம். அதையும் தடுத்து எங்களை கைது செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News