செய்திகள்

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published On 2019-01-23 12:03 GMT   |   Update On 2019-01-23 13:02 GMT
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி:

ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
Tags:    

Similar News