செய்திகள்

மதுரையில் வியாபாரி வீட்டில் 500 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2019-01-12 08:30 GMT   |   Update On 2019-01-12 08:30 GMT
வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 500 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கீரைத்துறை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம், குமரன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு (வயது 74). இவர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விறகுகடை நடத்தி வருகிறார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு தங்கவேலு வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை சாத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்றார். தங்கவேலுவின் குடும்பத்தினர் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 500 பவுன் நகை, ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

இதற்கிடையே நடைபயிற்சி முடிந்து 6 மணிக்கு வீட்டுக்கு வந்த தங்கவேலுவின் மனைவி கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் நகை, பணமும் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய்களும் வர வழைக்கப்பட்டன.

காலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தைரியமாக நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News