செய்திகள்

முசிறி அருகே லோடு ஆட்டோ-லாரி மோதல்- தொழிலாளி பலி

Published On 2019-01-07 14:32 GMT   |   Update On 2019-01-07 14:32 GMT
முசிறி அருகே லாரியும், லோடு ஆட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தில் கருவேல மரங்களை வெட்டி லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முசிறியை நோக்கி தொழிலாளர்கள் சிலர் இன்று காலை திரும்பி கொண்டிருந்தனர். உமையாள்புரம் அரசு பள்ளி அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த லாரியும், லோடு ஆட்டோவும் நேருக்குநேர் மோதின. இதில் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.  

திருச்சி வையம்பட்டி எளமனம்ராஜகோடாங்கி பட்டியை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஜெயா(36), ஜெயலட்சுமி (40) மற்றும் குளித்தலை குப்பாச்சிப்பட்டி கீழகோவில்பட்டியை சேர்ந்த  டிரைவர் பாக்கியராஜ் (18), அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி (18) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் காயமடைந்த சிலர் நாயக்கனூரை சேர்ந்த விஜயகுமார் (23), ராஜகோடாடங்கிப்பட்டியை சேர்ந்த பாரதி (17) ஆகியோர்  முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News