செய்திகள்

புதுக்கோட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி பலி

Published On 2019-01-05 13:03 GMT   |   Update On 2019-01-05 13:03 GMT
புதுக்கோட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே உள்ள மேலூரில் ராஜாராஜன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை, சேதுபதி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் 2 பேரும் பணிக்கு வந்தனர். பின்னர் அங்கு வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நேற்று வைத்த வெடியில் வெடிக்காத வெடிகள் இன்று திடீரென வெடித்தன. இந்த விபத்தில் சேதுபதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னத்துரை படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கியூ.பிரிவு போலீசார், வெள்ளனூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News