செய்திகள்

அறந்தாங்கியில் ஒரே நாளில் 3 கடைகளில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-01-04 14:19 GMT   |   Update On 2019-01-04 14:19 GMT
அறந்தாங்கியில் ஒரே நாளில் 3 கடைகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குளிர்பான நிறுவன ஏஜென்சி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (வயது 39). இவர் நேற்று காலை தனது நிறுவனத்திற்கு சென்ற போது, நிறுவனத்தின் கதவும், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. 

இதேபோல் அப்பகுதியில் உள்ள சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், 1 சவரன் தங்க நகை ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஏஜென்சி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

பணம் கொள்ளை போன சம்பவங்கள் குறித்து திருநாவுக்கரசு,சின்னச்சாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News