செய்திகள்
ஆலங்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
ஆலங்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 50). இவரது மனைவி காளியம்மாள்(46). குடிசை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை இவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் காளியம்மாளை வெளியே வருமாறு கூறினர். அவர்களும் சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், பத்திரங்கள், நெல் மூட்டை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.