திண்டுக்கல் அருகே பஸ் மீது லாரி மோதல்- 20 பயணிகள் படுகாயம்
திண்டுக்கல்:
நெல்லையில் இருந்து கோவை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் திண்டுக்கல் - பழனி சாலையில் பாலம் ராஜக்காபட்டி அருகே இன்று பிற்பகலில் வந்தது. அப்போது எதிரே பெருந்துறையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி பயங்கரமாக பஸ் மீது மோதியது. விபத்தை தவிர்ப்பதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையோரம் திருப்பிய போது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.