செய்திகள்

கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்

Published On 2019-01-03 10:15 GMT   |   Update On 2019-01-03 10:15 GMT
கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.

இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News