மீஞ்சூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் மாயா. இவரது மகன் விஜி (வயது 25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு முனிச்சம் பேடு கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட அனுப்பம்பட்டுக்கு சென்றார்.
அப்போது விஜி தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறி இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் விஜிக்கு பலத்த வெட்டு விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோதல் தொடர்பாக நேற்றே அனுப்பம்பட்டு சின்ன காலனியை சேர்ந்த பழனி, கவிஅமுதன், கார்த்திக், சரண்ராஜ், அருண், உதயகுமார், தீபக் ஆகிய 7 பேரை கைது செய்து இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
விஜி இறந்ததையடுத்து வன்னிப்பாக்கம் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.