செய்திகள்

சுகாதாரத்துறை குறித்து விமர்சிக்க மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை- விஜயபாஸ்கர்

Published On 2018-12-31 05:19 GMT   |   Update On 2018-12-31 05:57 GMT
சுகாதாரத்துறை குறித்து விமர்சிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #mkstalin #hivblood

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நேற்று மாலை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்காக அவசர கால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சென்னையில் மட்டும் கடந்த 11 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக விபத்து கால சிகிச்சை இறப்பு சதவீதம் என்பது 8.5 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் சி.டி. ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகள் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது.


தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறைக்கு என எதுவுமே செய்யவில்லை. ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தற்போது சுகாதாரத்துறை குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அவருக்கு சுகாதாரத்துறை குறித்து விமர்சனம் செய்வதற்கு எந்த வித அருகதையும் கிடையாது

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை வைத்து அரசியல் செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabaskar #mkstalin #hivblood

Tags:    

Similar News