செய்திகள்
கரூர் அருகே வீட்டில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கினார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி சாந்தி (42) கணவரை எழுப்பிய போது, சக்திவேல் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
மேலும் இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். சக்திவேல் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது மர்மநபர்கள் யாராவது தாக்கியதில் வீட்டிற்கு வந்து படுத்த அவர் காயம் காரணமாக இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.