செய்திகள்

சீர்காழி அருகே கார்-மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்- சாராயம் பறிமுதல்

Published On 2018-12-28 15:10 GMT   |   Update On 2018-12-28 15:10 GMT
சீர்காழி அருகே கார்-மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட ரூ.1 1/2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் நேற்று இரவு திருவெண்காடு அருகே மணிகிராமத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது 11 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளும், அதனை தொடர்ந்து ஒரு சொகுசு காரும் வந்தது. அவைகளில் வந்த 4 மர்ம நபர்கள் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருப்பதை கண்டதும் சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளையும், காரையும் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். 

இதனை கண்ட போலீசார் 2 வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநில சாராயம் 120 லிட்டர் இருந்தது. அதே போல காரில் 150 லிட்டர்சாராயமும், 15 அட்டைபெட்டிகளில் 720 மதுபாட்டில்களும் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 1/2 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து திருவெண்காடு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றபட்டன. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் யார்? அவர்கள் அதனை யாருக்காக கடத்தி வந்தனர்?  என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்தப்பி சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் சாராயம், மதுபாட்டில்களை தமிழக பகுதிக்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News