மந்தாரக்குப்பம் அருகே தனியார் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
நெய்வேலி:
கடலூர் டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 35). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கடலூரில் இருந்து விருத்தாசலம் சென்ற பஸ்சில் பணியாற்றி கொண்டிருந்தார். அந்த பஸ் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் நின்றது.
அப்போது விருத்தாசலம் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் (28) என்பவர் அந்த பஸ்சில் ஏறினார். அவரிடம் கண்டக்டர் சுந்தரமூர்த்தி டிக்கெட் கொடுத்து பணம் கேட்டார். அப்போது முருகன் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது முருகன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். பின்பு கண்டக்டர் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்தார்.