கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என்.மில் ராகவேந்திரா கார்டனை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்வர்ணலதா (வயது 29). தனியார் நிறுவன ஊழியர்.
ஸ்வர்ணலதாவுக்கு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.
இது குறித்து ஸ்வர்ண லதா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் அந்த வாலிபருக்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். ஆனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.இதனால் கடந்த சில நாட்களாக ஸ்வர்ணலதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழக்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஸ்வர்ணலதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.