அய்யம்பேட்டை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
அய்யம்பேட்டை, டிச.17-
அய்யம்பேட்டை ஜே.எச்.சி.ஏ. நகரைச் சேர்ந்தவர் சுலைமான் பாட்சா மகன் யாசர் அராபத் (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் மகன் முகமது அனாஸ் (வயது 21). இவர் சக்கராப்பள்ளியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் அய்யம்பேட்டையில் இருந்து பாபநாசம் நோக்கி சென்றனர். அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரம் மெயின் ரோட்டில் சென்றபோது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாசர் அராபத் நேற்று இறந்தார். முகமது அனாஸ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.