செய்திகள்

நெல்லை அருகே தொழிலாளி கொலை- கள்ளக்காதலனுடன் மனைவி கைது

Published On 2018-12-17 15:35 IST   |   Update On 2018-12-17 15:35:00 IST
நெல்லை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலுடன் அவருடைய மனைவி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 48). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார்.

அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு அவரது உடலை பார்த்த மற்ற உறவினர்கள், அவரது தலையில் ரத்த காயம் இருப்பதை பார்த்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கூடுதல் சூப்பிரண்டு அரிகர கிரண் பிரசாந்த், பணகுடி இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் குருசாமியை சரமாரி தாக்கி, அரிவாளால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணகுடி போலீசார், குருசாமி மரணம் அடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். அப்போது குருசாமி உடலை முதலில் போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றது யார்? யார்? என்று விசாரணை நடந்தது.

இது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள், உறவினர்கள் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குருசாமியின் மனைவி ஜெயந்தி (45) முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து மனைவியே குருசாமியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஜெயந்தி அப்பகுதியில் உள்ள மற்றொரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த சூளையை நடத்தி வந்த செல்வின் ஆபிரகாம்(29) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குருசாமிக்கு தெரிய வந்தது. அவர் மனைவியையும், கள்ளக்காதலனையும் கண்டித்தார். மேலும் மனைவியை தான் வேலை செய்யும் செங்கல் சூளைக்கு அழைத்தார்.

தொடர்ந்து அவர் மனைவியையும், செல்வின் ஆபிரகாமையும் கண்டித்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் குருசாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று செல்வின் ஆபிரகாம், குருசாமி வேலை செய்த செங்கல் சூளைக்கு சென்றார். அங்கு குருசாமி படுத்திருப்பதை பார்த்ததும் அவரை அடித்து கொலை செய்தார்.

பின்னர் செல்வின் ஆபிரகாம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையறிந்த ஜெயந்தி கணவர் தவறி விழுந்து இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வின் ஆபிரகாமையும், ஜெயந்தியையும் பணகுடி இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News