செய்திகள்

கச்சத்தீவு அருகே 8 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published On 2018-12-17 05:25 GMT   |   Update On 2018-12-17 05:25 GMT
கச்சத்தீவு அருகே நாட்டு படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. #FishermenArrested
ராமேசுவரம்:

ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை. அதே நேரம் நாட்டு படகு மீனவர்களுக்கு டோக்கன் தேவையில்லை என்பதால் அவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர்.

நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் தனது நாட்டுப்படகில் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்பட 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

வழக்கமாக கரையோர பகுதிகளில் மீன்பிடிக்கும் இவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.

அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #FishermenArrested

Tags:    

Similar News