செய்திகள்

பட்டாசு ஆலை அதிபர்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2018-12-15 09:58 GMT   |   Update On 2018-12-15 09:58 GMT
பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசி:

உச்சநீதிமன்ற தீர்ப்பால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதிலும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூடப்படுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வருகிற செவ்வாய்க்கிழமை முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்கலாம். பிரதமரிடம் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக்கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி, பொதுச்செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டான்பாமா நிர்வாகிகள் பேசுகையில், பட்டாசு ஆலை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி அடுத்த வாரம் விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
Tags:    

Similar News