செய்திகள்

எச்.ராஜாவை கண்டித்து வி.சிறுத்தைகள் கட்சியினர் மறியல்- கோயம்பேட்டில் 100 பேர் கைது

Published On 2018-12-13 11:48 GMT   |   Update On 2018-12-13 11:48 GMT
திருமாவளவன் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எச். ராஜாவை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர்கள் செல்வம், வி.கோ.ஆதவன், செல்லத்துரை, அம்பேத்வளவன், அன்புச்செழியன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

திடீரென அவர்கள் கோயம்பேடு 100 அடி சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News