செய்திகள்

மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருட்டு: 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Published On 2018-12-12 16:14 GMT   |   Update On 2018-12-12 16:14 GMT
மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 70). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி காலை 9 மணியளவில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆண்டிமடம் நான்கு ரோட்டில் டவுன் பஸ் ஒன்றில் ஏறிவந்தார். சிறிது தூரம் வந்தபின் டிக்கெட் எடுப்பதற்காக பையை திறக்க குனிந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

உடனடியாக கண்டக்டரிடம் கூறினார். கண்டக்டர் இடையில் நிறுத்தாமல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பஸ்சில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்து சென்ற 4 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனடியாக ஒரு ஆட்டோவில் அந்த 4 பெண்களையும் ஏற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் ஏர்வாடியை சேர்ந்த ரவி மனைவி சுப்பு(37), ராஜா மனைவிகள் ராணி(25), ரம்யா(36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) ஆகியோர் என்பதும், மேலும் அவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், அறிவழகன் ஆகியோர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் நகையை திருடிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News