கண்ணமங்கலம் அருகே காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே விளாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் ராஜப்பிரியா (வயது 19). இவர் கட்டிப்பூண்டி கிராமத்தில் உள்ள பாட்டி சின்னபொண்ணு வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற ராஜப்பிரியா திடீரென மாயமானார்.
இதுகுறித்து சேட்டு சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜப்பிரியா தனது காதல் கணவர் ராஜ்குமார் (26) என்பவருடன் சந்தவாசல் போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது ராஜப்பிரியா போலீசில், நாங்கள் 2 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், நாங்கள் இருவரும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் தனது கணவருடன் செல்வதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் ராஜப்பிரியாவை ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.