செய்திகள்

கோவையில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை

Published On 2018-12-07 06:45 GMT   |   Update On 2018-12-07 06:45 GMT
கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தைகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோடு, நீலிகோணார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 45).

இவர் சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(37)

இவர்களுக்கு ஹேமாவர்சினி (15), ஸ்ரீஜா(8) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹேமா வர்சினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வழக்கம் போல நேற்று இரவும் பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். எனவே செல்வராணி அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன் மனைவியை அடித்து உதைத்து தாக்கினார். இதனால் மனமுடைந்த செல்வராணி வெள்ளலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று காலை 8.30 மணி அளவில் செல்வராணி தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பத்மநாபனை காணவில்லை.



குழந்தைகள் உடலை பார்த்து செல்வராணி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு உதவி கமி‌ஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

குழந்தைகள் சடலமாக கிடந்த இடத்தில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் குழந்தைகள் இருவரது கழுத்தும் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் தெரிந்தது. இதனால் பத்மநாபன் தனது குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்தனர்.

சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய பத்மநாபனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பத்மநாபனின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான பத்மநாபனை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News