கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இந்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உடனே செல்லுங்கள் என மிரட்டல் தொணியில் கூறினர்.
அந்த சமயத்தில் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கினர். இதையடுத்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல டீசல், கூலி என ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் எங்களால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.
இதனிடையே பாம்பனையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் வானிலை மையமும் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறை முகம் வெறிச்சோடியது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy