செய்திகள்

வேன் மோதி தொழிலாளி பலி - போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டம்

Published On 2018-12-03 17:55 GMT   |   Update On 2018-12-03 17:55 GMT
வேன் மோதி தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததால், அவர்கள் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை:

மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 37). கூலி தொழிலாளியான இவர் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன், முத்தையா மீது மோதியதில் காயமடைந்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதைத்தொடர்ந்து அவரின் உறவினர்கள் மோதிய வேன் குறித்த விவரத்தை மானாமதுரை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் போலீசாரை கண்டித்து மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். தகவலறிந்து வந்த மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, சேகர், தவமுனி தலைமையில் போலீசார் சமரச பேச்சு நடத்தினர்.

அதில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்து உடலை வாங்கி சென்றனர்
Tags:    

Similar News