செய்திகள்

மருத்துவர் சிவக்குமாரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

Published On 2018-12-03 16:46 GMT   |   Update On 2018-12-03 16:46 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர் சிவக்குமாரிடம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக இன்று விசாரணை நடத்தியது. #jeyalalithadeathprobe
சென்னை:

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
 
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜரானார். இவரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.



அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. விசாரணை ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் உரிய பதிலளித்தார்.

அதன்பின்னர் மருத்துவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தேன்.
ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான சூழல் ஏற்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் யாரும் பரிந்துரையும் செய்யவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்பட்டது, முறையான தகவல்களை கொடுத்துள்ளேன். சிகிச்சை குறித்த ஆவணங்களும் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #jeyalalithadeathprobe
Tags:    

Similar News