செய்திகள்

போடி அருகே காதல் மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது

Published On 2018-12-03 11:22 GMT   |   Update On 2018-12-03 11:22 GMT
போடி அருகே காதல் மனைவியை சித்ரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசி (வயது 29). இவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவையில் வசித்து வந்தனர். பெண் குழந்தை பிறந்ததால் சிலம்பரசி குடும்பத்தார் கணவன்-மனைவியை மீனாட்சிபுரத்துக்கு அழைத்து வந்து 25 பவுன் தங்க நகை, குழந்தைக்கு 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து சிலம்பரசனுக்கு கடை வைத்து கொடுத்தனர்.

கணவன்-மனைவி துரைராஜபுரத்தில் வசித்து வந்தனர். சிலம்பரசின் தங்கை சிவமணி திருமணத்துக்காக நகைகளை அடமானம் வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது மேலும் ரூ.2 லட்சம் கடனாக வாங்கி வருமாறு சிலம்பரசியை கணவர் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே சிலம்பரசன் குடும்பத்தினர் சித்ரவதை செய்ய தொடங்கினர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சிலம்பரசி புகார் அளித்தார்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

இதேபோல் கம்பம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சத்யபிரியா (27). இவருக்கும் மஞ்சள் குளத்தைச் சேர்ந்த சிவனேசன் (29) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டது.

தற்போது சிவனேசன் மேலும் ரூ.4 லட்சம் வரதட்சணையாக வாங்கி வருமாறு சத்ய பிரியாவை கொடுமைபடுத்தியுள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சிவனேசன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News