செய்திகள்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 4 லட்சம் பாட புத்தகங்கள்

Published On 2018-11-27 00:56 GMT   |   Update On 2018-11-27 00:56 GMT
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. #Gaja
சென்னை:

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் பாட புத்தகங்கள் மழை தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் அரசு பாட நூல் கழகம் இலவசமாக வழங்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் பாட புத்தகங்களை இழந்தவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது.

அதன்படி நாகப்பட்டினத்துக்கு 1 லட்சத்து 57 ஆயிரத்து 485, தஞ்சாவூருக்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 175, திருவாரூருக்கு 55 ஆயிரத்து 391, புதுக்கோட்டைக்கு 21 ஆயிரத்து 7 உள்பட 3 லட்சத்து 95 ஆயிரத்து 78 புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வளவு புத்தகங்கள் தேவை என்றாலும் வழங்க தயாராக இருக்கிறோம். போதுமான அளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News