செய்திகள்

பள்ளிகொண்டா அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2018-11-26 11:36 GMT   |   Update On 2018-11-26 11:36 GMT
பள்ளிகொண்டா அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தார். ஏ.டி.எம். மையம் அருகே போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனையடுத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 22) என்பதும், செங்கல்சூளை வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News