செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள்

Published On 2018-11-22 16:40 GMT   |   Update On 2018-11-22 16:40 GMT
கஜா புயலின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. #gajacyclone #heavyrain
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் உள்பட பல கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தையே நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தென்னை, மா, பலா உள்ளிட்டவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனர். கஜா புயலின் கோர தாண்டவத்தால் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பிள்ளை போல் வளர்த்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வீழ்ந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். 

மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் திக்குமுக்காடி வருகிறது. இரவில் ஊரே இருளில் மூழ்கி கிடக்கிறது. தாகத்தை தணிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் ஊர் பொதுமக்களின் அவல நிலையை அறிந்து கதறித்துடித்த வெளியூரில் வசிக்கும் இளைஞர்கள் உடனே ஓடோடி வந்து உதவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 4 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை அனைவரும் கையுடன் எடுத்து வந்தனர். லாரிகள் உள்ளிட்ட வாகனங் களிலும் கொண்டு வந்து குவித்தனர். அந்த பொருட்களை கொண்டு ஊர் மக்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கொண்டு வந்த பொருட்கள் அனைத்து காலியானது. நேற்றுடன் அனைத்து உணவு பொருட்களும் தீர்ந்து விட்டது. சமைப்பதற்கு தேவையான பொருட்கள் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். 

மின்சாரம் இல்லாததால் சமைக்க கூட முடியவில்லை. உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். காலை-பகல் நேரங்களில் பொழுதை போக்கி விடுகிறார்கள். இரவு ஆகிவிட்டால் ஊரே கும்மிருட்டாகி விடுகிறது. எதிரில் வரும் நபரை கூட கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு இருள் சூழ்ந்து கிடக்கிறது. கிராமங்களில் செடிகள் அதிகம் உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகம் உண்டு. இதனால் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். #gajacyclone #heavyrain
Tags:    

Similar News