செய்திகள்
திண்டுக்கல் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 12 பேர் நசுங்கினர்
திண்டுக்கல் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 12 பேர் நசுங்கினர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திண்டுக்கல்:
கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் செம்பட்டி அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் வந்த பயணிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பஸ் டிரைவர் பெரியசாமி, பயணிகள் வேல்முருகன், குருவம்மாள், ரவிக்குமார், முனியம்மாள், மாரியம்மாள், ஜெயஸ்ரீ உள்பட 12 பேர் விபத்தில் நசுங்கினர்.
இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.