செய்திகள்

குடியாத்தம் அருகே பைக் மரத்தில் மோதி தொழிலாளி பலி

Published On 2018-11-22 11:34 GMT   |   Update On 2018-11-22 11:34 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பைக் மரத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலையை சேர்ந்தவர் சிவசெங்கோலன் (வயது 50). இவரது மகன் விஜய் (25). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளி.

நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு 2 பேரும் சைனகுண்டாவில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை விஜய் ஓட்டிவந்தார். சிவசெங்கோலன் பின்னால் அமர்ந்து வந்தார்.

கொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி என்ற இடத்தில் பைக் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் சிவசெங்கோலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விஜய் படுகாயமடைந்தார்

பொதுமக்கள் விஜய்யை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News